அரை விநாடி அநியாயம்

See more by Rajeshkumar

Available at Select Retailers

ரொம்ப நாட்களுக்குப் பிறகு திருச்சியில் மழை பெய்து ரோடுகள், ரோட்டோர மரங்கள் நனைந்து கொண்டிருந்த ஒரு ராத்திரி நேரம். மணி ஒன்பதே கால்.
 காவேரியில் படம் முடிந்து போயிருக்க பாடாவதி படம் பார்த்த எரிச்சலில் ஜனங்கள் தூறுகிற மழையில் நனைந்து கொண்டே ரிக்ஷாக்களையும் ஆட்டோக்களையும் தேடினார்கள். சினிமாவுக்கு நச்சரித்துக் கூட்டி வந்த மனைவி மேலும் குழந்தைகள் மேலும் வெறி நாய் மாதிரி 'வள்'ளென்று எரிந்து விழுந்தார்கள்.
 "இந்த படத்துக்கு வந்ததற்குப் பதிலாக வீட்ல உட்கார்ந்து டி.வி. நாடகத்தையாவது பார்த்திருக்கலாம்...? ஏண்டி டப்பிங் படம்ன்னு மொதலியே சொல்றதுக்கு என்ன கேடு...? அம்பது ரூபா... தண்டம்..."
 வழுக்கைத் தலையில் கர்ச்சீப்பை போட்டு ரிக்ஷாவைத் தேடிக் கொண்டிருந்த அந்த ஆசாமி தன் நோஞ்சான் மனைவியைப் பார்த்து சத்தம் போட - அவள் பதிலுக்கு
 "அனு ராதாவோட டான்ஸை மட்டும் வாயைப் பொளந்துகிட்டு பார்த்தீங்களே... அப்போ இந்த அம்பது ரூபா தண்டம்ன்னு உங்களுக்கு தோணலையா...?" என்று கேட்க
 அவளுடைய கணவன் முறைத்தான்.
 கோபால்ட் நிற பியட் காருக்குள் உட்கார்ந்து ஜனங்கள் போகட்டும் என்று காத்திருந்த அம்ருதாவும், ரமணனும் மேல் பாராவில் நடை பெற்ற கணவன் மனைவி பேச்சைக் கேட்டு விட்டு ஒருத்தரையொருத்தர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள்.
 "நிறைய கணவன் - மனைவிகள் இப்படி தான் இருக்காங்க..."
 "எதனாலே இப்படி...?"
 "ஒரு காம்ப்ளக்ஸ் தான்."

"என்ன காம்ப்ளக்ஸ்...?"
 "சினிமாவில வர்ற ஹீரோ... கார்ல போவான். அவனுக்கு அழகான ஒரு காதலியிருப்பா. கலர் கலரா ட்ரஸ் போட்டுட்டு ஒடுவான் ஆடுவான். ஆடம்பரமான பங்களாவில் சொகுசா இருப்பான்... இதையெல்லாம் சினிமாவில் பார்க்கிற ஆண்களோட அடி மனசுல சபலம் படியும்... எரிச்சலும் கிளம்பும்... தன்னோட அழகில்லாத பெண்டாட்டி மேலே எரிஞ்சு விழுவான்..."
 அம்ருதா சிரித்தாள்.
 "உங்களுக்கும் அப்படிப்பட்ட காம்ப்ளக்ஸ் வருமா?"
 "வராது..."
 "ஏன்...?"
 "என்னோட அம்ருதாவுக்கு முன்னாடி இப்ப இருக்கிற நடிகைகளெல்லாம் தூசி மாதிரி...! இந்த ரோஜா நிறம் யார்க்கு இருக்கு...? இந்த திராட்சை கண்ணு எவகிட்டே இருக்கு...? இந்த செர்ரி நிற உதடு... இந்த அமுல் வெண்ணெய் கன்னம்... இந்த வழவழ கழுத்து... இந்த... இந்த..."
 "போதும்... போதும்... கழுத்துக்குக் கீழே போகாதீங்க... காரை நகர்த்துங்க... எல்லாரும் போயாச்சு..." - அம்ருதா சொல்ல,
 காரை நகர்த்தினான் ரமணன். வைப்பர்கள் இயங்கி கண்ணாடியில் பட்ட நீரை வழித்து வழித்துப்போட்டது.
 "அம்ருதா..."
 "வீட்டுக்குப் போற வழியிலதானே ப்ரியா பிரிண்டர்ஸ் இருக்கு...?"
 "ஆமா..."
 "ஒரு நிமிஷம் காரை அங்கே நிறுத்தி நம்ம வெட்டிங் அனிவர்ஸரி இன்விடேஷன் கார்ட்ஸை வாங்கிட்டுப் போயிடலாமா? நாளையிலிருந்து எல்லார்க்கும் அழைப்பு கொடுக்க ஆரம்பிச்சுடணும்..."
 "என்னங்க?"

"ம்..."
 "நான் ஒண்ணு சொன்னா கோபிச்சுக்க மாட்டீங்களே...?"
 "இந்தக் கல்யாணமான ஒரு வருஷத்துல நான் என்னிக்கு உம்மேல கோபப்பட்டிருக்கேன்? மை ஸ்வீட் ஹனி... நீ என்ன சொன்னாலும் எனக்கு கோபம் வராது..."
 "இந்த வெட்டிங் அனிவர்சரி அவசியம் தானா...? நம்ம கல்யாண நாளை நாம ரெண்டு பேர் மட்டுமே கொண்டாடினா போதாதா?... அம்பது அறுபது பேரைக் கூப்பிட்டு விருந்து வெச்சுத்தான் கொண்டாடணுமா...?"
 "பின்னே எப்படிக் கொண்டாடலாம்? நீயே சொல்லு..."
 கார், தில்லை நகர் போகும் ரோட்டில் திரும்பியது. ரோட்டோரத்தில் தேங்கி நின்றிருந்த மழை நீரை 'ச்சல்ல்' என்று சிதறடித்தது
 கார் இயல்புக்கு வந்ததும் அம்ருதா சொன்னாள்

Other books by Rajeshkumar