"அம்மா!"
பால் குக்கர் விசிலடிப்பதற்காக காஸ்ஸ்டவ் அருகே காத்திருந்த சொர்ணம், சமையலறை வாசலில் எழுந்த குரலைக் கேட்டுத் திரும்பினாள்.
மகன் ஹரீஷ் நின்றிருந்தான். கையில் நீளமாய் ஒரு ப்ரெளன் கவர். முகம் முழுக்க சந்தோஷம், பவுடர் பூசியது மாதிரித் தெரிந்தது.
"என்ன ஹரீஷ்... லைப்ரரிக்குப் போய்ட்டு வர்றேன்னு கிளம்பினே! கையில ஏதோ கவரோடு வந்து நிக்கறே? என்ன கவர் அது?"
"அம்மா...! இப்ப எதுவும் கேக்காதே! மொதல்ல கிழக்குப் பார்த்து நில்லு."
"எதுக்குடா?"
"நில்லு சொல்றேன்."
"பால் குக்கர் இப்போ விசில் குடுத்துடும்."
"குடுக்கட்டும். நில்லும்மா."
"இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாமே..."
செயற்கையாய் சலித்துக் கொண்டே கிழக்கு பார்த்து நின்றாள்.
"நின்னுட்டேன் என்னடா...?
டுஞ்சாண்கிடையாக சொர்ணத்தின் கால்களில் விழுந்தான்.
"நல்லாயிரு!" ஹரீஷின் தலையைத் தொட்ட சொர்ணம், சிரிப்போடு கேட்டாள், "எதுக்காகடா இந்த அர்ஜெண்ட் ஆசீர்வாதம்?"
"உன் மகனுக்கு வேலை கிடைச்சாச்சும்மா. இதோ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்."
சொர்ணத்தின் கண்களில் நீர் முட்டிக் கொண்டது.
"என் ராஜா... நிஜமாவாடா சொல்றே? எந்த ஊர்ல வேலை கிடைச்சிருக்கு?"
"ஆமதாபாத்தில் இருக்கிற சிஸ்டம்ஸ் அண்ட் கண்ட்ரோல்ஸ் கம்பெனியில் அஸிஸ்டெண்ட் எலக்ட்ரானிக் எஞ்ஜினீயரா போஸ்டிங். அடுத்த வாரத்துக்குள்ளே வந்து ட்யூட்டியில் ஜாய்ன் பண்ணும்படியா ஆர்டர்ல இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருக்காங்க.
சம்பளம் எவ்வளவு தெரியுமாம்மா?"
"எ... எவ்வளவு?"
"எவ்வளவு இருக்கும்னு நினைக்கிறே?"
"மூவாயிரம்...?"
"ஏம்மா, நான் படிச்சிருக்கிறது எம்.ஈ. எலெக்ட்ரானிக்ஸ். வேலை பார்க்கப் போறதோ இந்தியாவில் இருக்கிற பெரிய கம்பெனிகளில் ஒன்றான சிஸ்டம்ஸ் அண்ட் கண்ட ரோல்ஸ்ல, சம்பளத்தை இப்படியா குறைச்சுச் சொல்றது?"
"எனக்கென்னடா தெரியும்?"
"சரி... சொல்றேன், கேட்டுக்க, மாசச் சம்பளம் எனக்குப் பன்னிரண்டாயிரம் ரூபாய். அலவன்ஸ் தனி. குடியிருக்கத் தனி க்வார்ட்டர்ஸ். கம்பெனிக்குப் போக வர கார்..."
சொர்ணம் கண்களை அகல விரித்துக் கொண்டு பிரமித்துப் போய் மகனைப் பார்த்தாள்