"சிவராத்திரி வந்தால் குளிரும் சிவ சிவான்னா போயிரும்னு சொல்லுவாங்க. இதென்ன இந்த மார்ச்சிலேயும் இப்படியொரு பனி. அதுவும் மூடுபனி..."
வாசல் பெருக்கும் அம்மாவின் முணுமுணுப்பு ஜன்னல் வழியாக வந்தது.
கூடவே சரக் சரக் என்று பெருக்கித் தள்ளும் ஓசை. பனிக்குப் பின்னால் ஒளிச் சிதறலுடன் லாரிகள். கறுப்பு பூதங்களாகப் போர்வை போர்த்திய மனித நடமாட்டங்கள் தெரிந்தன.
"இன்னுமா எந்திரிக்கல? ஏய் முண்டம்" என்ற அம்மாவின் கூச்சலுக்கு, சட்டென்று எழுந்து நின்றாள் தேவகி. கைகளைக் கோர்த்து உயர்த்தி உடம்பை முழுவதுமாக நெளித்து சோம்பலை உதறினாள். கலைந்து கிடந்த தலைமுடியை அள்ளி முடித்துக்கொண்டு, கைகளைப் பரபர வென்று தேய்த்து விட்டுக் கொண்டு -
கட்டிலை விட்டுச் சரிந்து இறங்கினாள். அன்றைய பொழுது அவளுக்கு இப்போதுதான் விடிந்துவிட்டது.
கிணற்று உருளை கிரீச்சிட, குளித்துவிட்டு மாற்றுப் புடவையுடன்...
"முண்டம் பூப்பறிச்சிட்டு வாடி" என்ற அம்மாவின் கூச்சலுக்கு ஈரப்புடவையிலேயே பவழமல்லியைப் பறித்துப் போட்டுக்கொண்டு...
மனசுக்குள் பாரதி வந்தாள். மீசையில்லாதப் பெண் பாரதி. சினேகிதி!
"ஆண் துணையில்லாத வாழ்க்கை ஒரு போர். இப்ப என்னைப் பார்."
பார்க்க மாட்டாள். தினம் தினம் அவளுக்கு இரண்டு விஷயம் மாற்றிக்கொண்டேயாக வேண்டும். ஒன்று புடவை. இரண்டாவது? காதலன்!
கொழுக் கொழுக்கென்ற அவள் உடம்புக்கு காதலர்கள் பட்டியல் மிக அதிகம்.
"ஏய் முண்டம்..." என்ற அப்பாவின் குரலுக்கு அவசரமாக உள்ளே போனாள். பூஜையறையில் அப்பா. எதிரேயிருந்த தட்டில் பவழமல்லியை உதிர்த்துவிட்டுச் சொன்னாள், "அப்பா, பேசாம எனக்கு முண்டம்னே பேர் வைச்சிருக்கலாம்... தேவகி எதுக்கு?"
"அது செல்லப் பேருடா முண்டம். ஊஞ்சல்லே பேப்பர்..."
"அப்பவே வைச்சுட்டேன்."
"கிராஸ் வேர்ட்ஸ்."
"அப்பவே எழுதிட்டேன்"
'அடிப்பாதகி' என்பதுபோலப் பார்த்தார் அப்பா.
"அடுத்த வீட்டு சர்மா சார் வர்றதுக்குள்ளே பூஜையை முடிங்கப்பா. அப்புறம் அவர் படிச்சதுக்கப்புறம்தான் பேப்பர் உங்களுக்கே கிடைக்கும். ஹர்ரீயா!?"
அவசரமாகப் பூஜையில் இறங்கினார் அப்பா. வாசலில் வந்து நின்ற யாரோ வாயில் முன் விலாசம் கேட்க, இவள் பதில் சொல்லியனுப்பியதும்...
"அடிப்பாவி... யாருடி அவன் முண்டமே!"
விளையாடும் ஆசை வந்தது. 'மை பாய் பிரண்ட்' என்றாள் ஆங்கிலம் தெரியாத அம்மாவிடம். "தமிழ்ல சொல்லுடி முண்டமே"
"ஏன் புரியலையா? பாய் பிரண்டுக்கு அர்த்தம் அப்பாவைக் கேளு."
உள்ளே வந்து அம்மாவிடம் அப்பா கேட்டார். "யாருடி வந்தா?"
"மை பாய் பிரண்டாம்" என்ற அம்மாவின் வார்த்தைக்கு அதிர்ந்தார். பிறகு சிரித்தார். "என்னடி குழந்தை... என்ன இவ உளர்றா?"
"அப்பா, யாரோ ஒருத்தர் அட்ரஸ் கேட்டார். சொன்னேன். அதுக்குள்ளே அம்மா வந்து ஓரப்பார்வை பார்த்தாங்களா... கொஞ்சம் விளையாடினா என்னன்னு ஆசை வந்தது. அதான் பாய் பிரண்ட்'னு சொன்னேன்."
"குறும்புக்காரி..." அம்மாவை உள்ளே அனுப்பிவிட்டுச் சொன்னார், "இதபாருடி முண்டம். விளையாட்டோட நிறுத்திக்க. நிஜமா யாராவது பாய் பிரண்டைத் தேடிக்காதே. உன் கல்யாணம் எப்போன்னு தீர்மானமாயிடுச்சு?"
"எப்போன்னா?"
"தொட்டில் காலத்திலேயே எங்க அக்கா பிள்ளை தமிழழகுதான்னு தீர்மானமான முடிவு."