பூவிதழ் புன்னகை...

See more by chitralekha

Available at Select Retailers

சென்னை நகரின் அடுக்குமாடி வளாகங்களிலிருந்து விடுபட்டு, அழகாகக் காட்சியளித்தது அந்த வீடு. சிறிய வீடு எனினும் தனி வீடு. பழைய காலத்து வீடு என்பதால் கதவுகள் செட்டிநாட்டு வீடுகளில் உள்ளது போல் பழமையின் பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருந்தது. 

வீட்டிற்கு முன்புறம் காணப்பட்ட முற்றம் காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருந்தது. அங்கே அமர்ந்து செய்தித்தாள் படித்தபடி காஃபி குடிப்பது ஒரு சுகம். கால்களை நீட்டியபடி களைப்பு நீங்க, ஓய்வு எடுப்பது ஒரு சுகம். 

வீட்டின் மதில் சுவரோரம் நடப்பட்டிருந்த செடிகளில் பூத்திருந்த பூக்களின் சுகந்தம் ஒரு சுகம். வேப்ப மரக் காற்றின் குளிர்ச்சி ஒரு சுகம். 

இத்தகைய அருமையான சூழ்நிலையிலும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையிலும் வனஜா சூடாக இருந்தாள். வார்த்தைகளைப் பொரிந்து தள்ளினாள். 

"அட... நீங்க என்னங்க... சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டு? உங்க அக்கா மகன் என்னத்தைச் சம்பாதிச்சுக் கிழிக்கிறான்னு... அவனுக்கு நம்ம பொண்ணைக் கட்டிக் குடுக்கணும்ங்கறீங்க?" 

கணவர் சுந்தரபாண்டியன் 'என்ன பதில் சொல்வது?' என்று யோசித்தார். 

கடுமையாகிப் போன மனைவியின் முகம் பார்த்து, தானும் கடுப்பாகி விடாமல், தன்மையாகப் பேச ஆரம்பித்தார். 

"இங்க பாரு வனஜா... எங்க அக்காவுக்குச் சொத்து, சுகம் எதுவும் இல்லைன்னாலும் தங்கமான பையனைப் பெத்து வச்சிருக்கா..." 

அப்போது இடைமறித்துப் பேசினாள் வனஜா. "தங்கமான பையனைப் பெத்து வச்சு என்ன பிரயோஜனம்? தங்கக் காசு சேர்த்து வச்சிருக்கானா? சொத்து... சுகம் வாங்கிப் போட்டிருக்கானா...?" 

"த்சு... நான் சொல்ல வந்ததை முழுசாக் கேளு வனஜா! சொத்து... சுகம்ங்கறியே? இப்ப.... இதோ நாம குடியிருக்கிற இந்த வீடு... நானோ நீயோ சம்பாதிச்சுக் கட்டினதோ... வாங்கினதோ இல்லை. எங்க அப்பாவோட பூர்வீகச் சொத்து. இன்னிக்கு வீடும், நிலமும் விக்கிற விலைவாசியில நம்பளால வாங்க முடியுமா? இந்த வீடு இருந்ததுனால... வாடகை செலவு இல்லாம என்னோட சம்பளத்துல வாழ்க்கையை ஓட்டினோம். 

"நம்ம பொண்ணு ராதாவுக்கு நகை நட்டு வாங்கி வச்சிருக்கோம். கல்யாணச் செலவுக்கும் ஓரளவு பணம் சேர்த்து வச்சிருக்கோம். என்னோட ஓய்வு ஊதியத்துல கஷ்டப்படாம காலம் தள்றோம். இந்த வீடு எங்க பூர்வீக வீடுங்கறதுனால இதில் எங்க அக்கா கமலாவுக்கும் சம உரிமை உண்டு. ஆனா... அவ எனக்கு விட்டுக் கொடுத்து, எழுதி, கையெழுத்தும் போட்டுக் குடுத்துட்டா. 

"நம்ப தம்பிக்குப் பொண்ணு இருக்கா. அவளோட கல்யாணச் செலவு இருக்கு.... நம்ப மகன் சம்பாதிச்சு வீடு, வாசல் கட்டாயமா வாங்கிடுவான்'னு பெருந்தன்மையா விட்டுக் குடுத்திருக்கா. சட்டப்படி இந்தச் சொத்துல அவளுக்கும் உரிமை உண்டு. ஆனா... மனோ தர்மப்படி.... அவ, இதில் பங்கு கேட்கலை..." 

"அதுக்காக? வீட்டைக் குடுத்துட்டு, என் பொண்ணை வாங்கிப்பாங்களாமா உங்க அக்கா?" 

"ஏன் வனஜா.... இப்படி நிஷ்டூரமாப் பேசற? இன்னிக்கு... சாதாரண வேலைக்குப் போற எங்கக்கா மகன் வினோத்... இப்படியே இருந்துடுவானா? முன்னேற மாட்டானா? அவன் கெட்டிக்காரன். முயற்சி பண்ணி, வெற்றிப் படிக்கட்டுல ஏறுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..." 

"நம்பிக்கையெல்லாம் நாக்கு வழிக்கக்கூட ஆகாதுங்க. இன்னிக்கு நடப்பு என்னவோ.... அதைத்தான் பார்க்கணும். நாளைக்கு அவன் சம்பாதிப்பான்..... முன்னேறுவான்னு.... 

நல்லபடியா வாழ வேண்டிய பெண்ணை பரிட்சைக்கு அனுப்புற மாதிரி அனுப்ப முடியுமாங்க? நீங்க சொல்ற மாதிரி உங்க அக்கா மகன் வினோத்... நல்ல நிலைமைக்கு வரட்டும். முன்னேறட்டும். அது வரைக்கும் நம்ம பொண்ணு ராதா காத்திருந்தாலும், அவ வயசு காத்திருக்குமா?"

"வினோத் பெரிய அளவுல முன்னுக்கு வர்றதுக்கு நாளாகும்ன்னு ஏன் கணக்குப் போடுற?" 

"இந்தப் பேச்சை இதோட நிறுத்திக்குவோம். எனக்கு ராதாவை அந்த வினோத்துக்குக் குடுக்கறதுல துளிக்கூட விருப்பம் இல்லை. இது விஷயமா.... பேசி நமக்குள்ள வீணா எதுக்கு சண்டை?" 

"சண்டை போடணும்ங்கறது என்னோட எண்ணம் இல்லை. எந்த விஷயமா இருந்தாலும் தெளிவா, விரிவா பேசித்தான் முடிவு எடுக்கணும்..." என்று கூறிய சுந்தரபாண்டியன், தயக்கத்துடன் பேச்சைத் தொடர்ந்தார்.

Other books by chitralekha