"மதனவள்ளி... அடியேய் மதனவள்ளி..."
அழகரசியின் குரல் கொல்லைப்புறத்திலிருந்து வந்தபோது மதனவள்ளி கையளவு கண்ணாடியை முகத்திற்கெதிரே பிடித்துக் கொண்டு ஈர்க்குச்சியால் மையைத் தொட்டு விழிகளில் தீட்டிக் கொண்டிருந்தாள்.
அம்மாவின் குரலுக்கு கையிலிருந்த குச்சி நிலைதடுமாறி லேசாக கண்ணில் பட சட்டென்று கண்கள் கலங்கி சிவந்துவிட்டது. சட்டென்று குச்சியை கீழே போட்டுத் திரும்பினாள்.
"மதனவள்ளி…"
அம்மாவின் குரல் இந்த முறை அதிகாரத்துடன் சேர்ந்து கோபத்தையும் சுமந்து வந்தது.
அவசர அவசரமாக அந்தக் கண்ணாடியில் தன் முகத்தை இப்படியும் அப்படியுமாக அழகுபார்த்தவள், அதை ஆணியில் மாட்டிவிட்டு ஓடி வந்தாள்.
கூடத்தைக் கடந்து கொல்லைப்பக்கம் வந்தவள் அம்மாவைப் பார்த்தாள்.
அழகரசி கட்டியிருந்த ஆடுகளை அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.
"அம்மா... ஏன் கூப்பிட்ட?"
அழகரசி நிமிர்ந்தாள்.
அவளுடைய விழிகள் மகளைப் பார்த்துத் திகைத்தன.
புத்தம்புது பாவாடை தாவணியில் நின்றிருந்த மதனவள்ளியைப் பார்த்து துணுக்குற்றாள்.
அவளுடைய முகத்தில் அதிகப்படியான அலங்காரம் இருப்பதாகப்பட்டது. காதோரம் முடிகளை இழுத்துப் பறக்க விட்டிருந்தாள்
ஏண்டி... நீ ஆடு மேய்க்கப் போறியா? இல்லே... ஏதாவது திருவிழாவுக்குப் போறியா? பொட்டியில இருக்கிற புதுசையெல்லாம் ஏண்டி எடுத்து மாட்டிக்கிட்டு நிக்கறே?"
"அது வந்து... அம்மா நம்ம கஸ்தூரியில்லே... அவ இன்னைக்கு மாரியம்மன் கோவில்ல பால் ஊத்தப் போறாளாம். என்னையும் கூப்பிட்டா. அதான்..."
"இந்தாயிருக்கிற மாரியம்மன் கோவிலுக்கு எதுக்கடி புதுசு?"
"அவளும் புதுசா கட்டிக்கிட்டு வர்றா..."
"ம்... என்ன திடீர்னு பால் ஊத்தப் போறா?"
"வர்ற வரனெல்லாம் தட்டிக்கிட்டுப் போகுதாம். நாகதோஷம் இருக்காம். தினமும் புத்துக்குப் பாலூத்தச் சொல்லியிருக்காராம் ஜோசியரு. அதான்..."
"அப்படியா? அதுக்காக அவ தினமும் புதுசு கட்டிக்கிட்டு போனா நீயும் புதுசு கட்டணுமா? நீயும் அவகூட சேர்ந்து பாலூத்திட்டு வேண்டிக்க, உனக்கும் ஒரு நல்ல புருஷன் வரணும்ன்னு."
மதனவள்ளியின் முகத்தில் வெட்கம் என்ற சொல்லுக்கு சிவப்பு நிறம் இருக்கிறது என்பது தெரிந்தது.
"போம்மா!"
அம்மா அருகே வந்தாள். ஆடுகள் 'மே' என கத்திக் கொண்டே அவள் பின்னால் ஓடிவந்தன.
"என்னடி வெட்கமா? பொண்ணாப் பொறந்தா ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டித்தானேடி ஆகணும்."
"அதுக்கென்ன இப்ப? அவளுக்கு தோஷம். பாலூத்தறா. எனக்கென்ன தோஷமா? தவிர இதெல்லாம் பொய். நாகதோஷமாவது பல்லி தோஷமாவது?"
"பல்லுலயே போடுவேன். போய் வேலையைப் பாரு. ஆடெல்லாம் போகுது பாரு, போ... போ..."
காலில் இருந்த கொலுசுகள் ஒலிக்க கொல்லைப்புற படிகளில் குதித்து குதித்து இறங்கினாள் மதனவள்ளி.
அவளும் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல் ஆடுகளில் பின்னே ஓடினாள்.
வாசல்பக்கம் வந்தபோது அழகரசி கையில் பால் சொம்புடன் நின்றாள்.
"இந்தா... கஸ்தூரி வீட்ல பாலைக் கொடுத்துடு. இருட்டறதுக்குள்ள வந்திடு."
"சரிம்மா..."
வலதுகையில் பால் சொம்பும் இடது கையில் ஆடுகளை விரட்டக் குச்சியும் சுமந்து சென்றாள் மதனவள்ளி.
அவளுக்கு வழிகாட்டுவதைப் போல் ஆடுகள் 'மே...மே' என மூக்கால் கத்துவதைப் போல் கத்திக்கொண்டு முன்னே சென்றன. பின் தொடர்ந்தாள் மதனவள்ளி..
இரண்டு தெருக்களை ஆடுகள் தன்னிச்சையாகக் கடந்தன.
சொல்லிக் கொடுத்ததைப் போல் கஸ்தூரியின் வீட்டு வாசலில் நின்றன.
மதனவள்ளிக்கு அந்த வீட்டைப் பார்வையில் வாங்கியதும் நெஞ்சுக்குள் சிலிர்ப்பு ஓடியது. கைகள் வாசல் கேட்டைத் திறக்க விழிகள் வீட்டின் மாடியிலிருந்த அந்த அறையை நோக்கிச் சென்றன